தூங்கிய டிரைவர்… கட்டுப்பாட்டை இழந்த கார்… பறிபோன 6 உயிர்கள்!- திண்டிவனத்தில் அதிகாலையில் சோகம்
திண்டிவனம் அருகே காரில் ஓட்டு வந்த டிரைவர் தூங்கியதால் கார் ஓடையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லையில் இருந்து கார் ஒன்று சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் கார் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கும் இங்குமாக ஓடிய கார், ஓடையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சென்ற குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “நெல்லையில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பெரிய காரில் சென்னை வந்துக் கொண்டிருந்தனர். திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் கார் வந்தபோது ஓட்டுநர் தூங்கியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர். இதில் குழந்தையும் இறந்துவிட்டது. படுகாயம் அடைந்தவர் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நடந்துள்ளது. உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன் பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்க உள்ளோம்” என்றனர்.