6 வழி சாலையாக மாறுகிறது சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டம்:தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

 

6 வழி சாலையாக மாறுகிறது சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டம்:தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை: சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தில் சில மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது.

சென்னை – சேலம் இடையே 8 வழி சாலை திட்டம் அமைக்க மத்திய – மாநில அரசுகள் முடிவு செய்தன. இதற்காக  மத்திய அரசு ரூ 10,000 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி மரங்களை வெட்ட ஆரம்பித்தது தமிழக அரசு.

இதனையடுத்து இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டது. தொடர்ந்து இதுகுறித்த வழக்குகள் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மரங்களை வெட்டுவதற்கு நீதிமன்றம் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்த திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க நேரிடும் என எச்சரித்தது.

இந்நிலையில், சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் செய்து அந்த அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு முதலில் ரூ.10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது ரூ.7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக வனப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது 103 ஏக்கராக அது குறைக்கப்பட்டு உள்ளது. அதுபோல வனப்பகுதியில் 13.2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த தூரம் 9 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த பசுமை வழிச்சாலை 90 மீட்டர் அகலத்தில் மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது சாலையின் அகலம் 70 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் இந்த சாலை செல்லும் போது கணக்கிடப்பட்டிருந்த 70 மீட்டர் அகல சாலையானது, தற்போது 50 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க இருந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2, 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அது 1,900 ஹெக்டேராக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் போன்ற தேவைகள் அடிப்படையில் இப்பகுதியில் 8 வழிச்சாலை அமைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும். வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை என கூறப்பட்டுள்ளது.