திருநங்கைகளிடம் மதுபோதையில் தகராறு செய்த நபர் கொலை – 5 பேர் கைது!
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் திருநங்கைகளிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை, கொலை செய்த வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை ஆற்றங்கரை தெரு வேதம்பிள்ளை காலனியை சேர்ந்தவர் ஐயப்பன் (48). இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில், அதே பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கலைச்செல்வி, மகா, கிருத்திகா உள்ளிட்டோருடன் தகராறில் ஈடுபட்டு, தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அதே பகுதியை சேர்ந்த கணேசன் (43), பஜ்ருதீன் (21), அருள்ராஜா (24), மணிகண்டன் (19), ரஞ்சித்(18), ஆகியோர், ஐயப்பன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் உள்ளிட்ட 5 பேரும், ஐயப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பியேடினர்.
இதில் பலத்த காயமடைந்த ஐயப்பனை, உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஐயப்பனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்து, கணேசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.