4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 64 வயது முதியவர் சிறையிலடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அருகே உள்ள பாலன் நகரில் 64 வயது ராமச்சந்திரன் என்பவர் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் கடந்த 2 .8 .2019 அன்று புகார் கொடுக்கப்பட்டது.
ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் முதியவரின் மீதான குற்றத்தினை உறுதி செய்தனர் போலீசார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர். சத்தியா அளித்த தீர்ப்பில், ராமச்சந்திரன் குற்றவாளி என்றும் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்தார் . அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்திருக்கிறார்.
இதையடுத்து முதியவர் ராமச்சந்திரனை திருச்சியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர் போலீசார் .