மக்கள் தொகை தினத்தில் ஐ.நா வலியுறுத்தும் 4 அம்சங்கள்

 

மக்கள் தொகை தினத்தில் ஐ.நா வலியுறுத்தும் 4 அம்சங்கள்

ஒவ்வோர் பத்தாண்டுகளுக்கும் மக்கள் தொகை எடுக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில்தான் மக்கள் நல திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. எனவே, அதன் முக்கியத்துவத்தைத் தெரிவிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11-ம் தேதி சர்வதேச மக்கள் தொகை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை ஒட்டி, ஐ.நா விடுத்துள்ள செய்தி.

2020 ஆம் ஆண்டிலும் அடுத்த 2021 ஆம் ஆண்டிலும் உலக நாடுகளில் சுமார் 150 நாடுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடக்க இருக்கின்றது. இந்தியாவில் 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவேண்டும். இந்நேரம் அது தொடர்பான பல வேலைகள் நடந்து இருக்க வேண்டும்; ஆனால், கொரோனாவால் அனைத்தும் முடங்கி இருக்கின்றன.

மக்கள் தொகை தினத்தில் ஐ.நா வலியுறுத்தும் 4 அம்சங்கள்

உலக மக்கள் தொகை தினத்தில் நாம் பெரும்பாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துவோம். சிறுகுடும்ப நெறி, குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள், சட்டபூர்வமான திருமண வயது போன்றவை குறித்த விழிப்புணர்வும் ஆலோசனைகளும் விவாதங்களும் இந்த தினத்தில் வழக்கமாக இருக்கும். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் இதே விஷயங்களை நாம் வேறு கோணத்தில் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

அதாவது கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை அலசிப் பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் நுகர்பொருட்கள் உற்பத்தியும் விநியோகச் சங்கிலித் தொடரும் பாதிக்கப்பட்டு இருப்பதால் கருத்தடை சாதனங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. அதனால் விரும்பாத மற்றும் தேவையில்லாத கர்ப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதாரத்துறை முழுவீச்சாக ஈடுபட்டிருப்பதாலும் பெண்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல சுகாதார சேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பாலினப் பாகுபாடு சார்ந்த வன்முறைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவேதான் இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்திற்கான மையக்கருத்தாக ”கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுத்தல்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை இப்போது எப்படி பாதுகாப்பது” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) கோவிட்-19 நெருக்கடி சூழலின் பின்னணியில் இந்த உலக மக்கள்தொகை தினத்தில் கீழ்வரும் அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது:

1. விரும்பாத மற்றும் தேவையற்ற கர்ப்பம்

2. பாலின பாகுபாடு அடிப்படையில் பெண்கள் மீதான வன்முறை

3. குழந்தை திருமணம்

4. பெண் பிறப்புறுப்பில் வெளிப்புறத்தை நீக்குதல்

இவை எல்லாமே பெண்களின் உரிமைகள் சார்ந்த விஷயங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பெண்களின் பாலியல் உரிமை மற்றும் இனப்பெருக்க மண்டல உரிமைகளாகும். பாலினப் பாகுபாடு துலக்கமாக இருக்கும் இந்தியாவில் பெண்களின் இந்த உரிமைகள் பொதுவாகவே கவனம் பெறுவதில்லை. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் தடுப்பிற்கு முக்கியத்துவம் தரப்படும் இச்சூழலில் இந்த உரிமைகள் புறக்கணிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தினத்தில் பெண்களின் இத்தகைய உரிமைகள் எல்லாக் காலத்திலும் எல்லா சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை என வலியுறுத்தப்பட வேண்டும்.

உலக மக்கள்தொகை நிலைமை 2020 அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் மிக அண்மையில்தான் உலக மக்கள்தொகை நிலைமை 2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. ”எனது விருப்பத்துக்கு எதிராக: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் மற்றும் பாலின சமத்துவத்தைக் குலைக்கும் நடைமுறைகள்” என்ற தலைப்பில்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 19 நடைமுறைகள் பெண்களுக்கு தீங்கு இழைப்பதாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகளில் ஒன்றோ பலவோ உலக நாடுகள் முழுவதுமே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நடைமுறைகளைத் தங்கள் மகள்கள் மீது தெரிந்தே பிரயோகிக்கின்றனர். இவை பாலினச் சமத்துவமின்மை என்பதில்தான் காலூன்றி நிற்கின்றன. பெண்களின் உடல்களையும் பாலியல் மற்றும் பாலின்ப விழைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்த நடைமுறைகள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலானது இந்த நடைமுறைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

மக்கள் தொகை தினத்தில் ஐ.நா வலியுறுத்தும் 4 அம்சங்கள்

உலக மக்கள் தொகை தினத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பேசாமல் பெண்கள் குறித்து பேசுவது ஏன் என்ற கேள்வி எழும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துதல் என்பது சட்டத்தால், நிர்ப்பந்தத்தால், வலியுறுத்தலால் அல்லது தேவையால் ஏற்படுத்த முடியாது. பெண்களால்தான் இதை சாத்தியமாக்க முடியும். ஆனால் அதற்கு பெண்களுக்குப் பாலியல் மற்றும் இனப்பெருக்க மண்டல உரிமைகளும் எழுத்தறிவும் இருக்க வேண்டும். பாலின சமத்துவம் நிலவும் சமுதாயத்தில்தான் மற்றும் தன் உடல்மீது பெண்களுக்கு முழு உரிமை இருக்கும் சமுதாயத்தில்தான் மக்கள்தொகை தேவைக்கு ஏற்ப கட்டுக்குள் இருக்கும். எனவே கோவிட்-19 நெருக்கடிக்கு அப்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு இந்த நேரத்தில் நாம் முக்கியத்துவம் கொடுத்தாகவேண்டும். அதற்காகத்தான் இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினம் இவர்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.