தூக்கில் தாய், மகள்… தரையில் இறந்து கிடந்த பேத்திகள், நாய்கள்… பட்டுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்

 

தூக்கில் தாய், மகள்… தரையில் இறந்து கிடந்த பேத்திகள், நாய்கள்… பட்டுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்

மகள், 2 பேத்தி மற்றும் நாய்களுடன் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பட்டுக்கோட்டையை அதிரவைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது வளவன்புரம் கிராமம். இந்த கிராமத்தில் சாந்தி (50) என்ற பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருடன் மகன், இரண்டு பேத்திகள் இருந்து வந்துள்ளனர். மேலும், இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் ஆள் மாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் சகாதேவன், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் . விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, சாந்தி, அவரது மகள் துளசிதேவி ஆகியோர் தூக்கில் தொங்கி கிடந்தனர். 2 பேத்தியும், 2 நாய்களும் அருகில் இறந்து கிடந்தனர். 4 பேரின் உடல்களை கைப்பற்றி காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், 2 நாய்களின் உடல்கள் கால்நடை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பேத்திகளுக்கும், நாய்களும் முதலில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் சாந்தி, அவரது மகள் தூக்கில் தொடங்கியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இருந்தாலும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இந்த பகுதிக்கு சாந்தி தனது மகள், பேத்திகளுடன் சந்தோஷமாக வசித்து வந்திருக்கிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்கு இரண்டு நாய்களையும் வளர்த்துள்ளார். கொரோனா ஊரடங்கால் குடும்பம் வறுமையில் தவித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. பிரேத பிரசோதனை அறிக்கை வந்தவுடன் முழு விவரமும் தெரியவரும்” என்று முடித்துக் கொண்டனர்.