புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது… ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு…

 

புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது… ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு…

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய 4 இளைஞர்களை கைதுசெய்த வனத்துறையினர், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட உங்கனூரான் குட்டை வனப்பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மல்லியம்பட்டி செல்லும் சாலையின் அருகேயுள்ள முட்புதரில் இருந்து 4 நபர்கள், சாக்குமூட்டையுடன் செல்வதை கண்ட வனத்துறையினர், அவர்களை மறித்து சாக்குமூட்டையை சோதனையிட்டனர்.

புள்ளிமானை வேட்டையாடிய 4 பேர் கைது… ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு…

அப்போது, மூட்டையினுள் ஆண் புள்ளிமானின் தலை, கால் மற்றும் இறைச்சி ஆகியவை வெட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, வனத்துறையினர் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து, ரமேஷ், பழனிச்சாமி மற்றும் குரும்பபாளையத்தை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது.

மேலும், 4 பேரும் முட்புதர்களில் சுருக்கு கம்பிகள் வைத்து புள்ளிமானை வேட்டையாடி, அதனை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, சுருக்கு கம்பி மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், 4 பேருக்கும் தலா 25 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, விடுதலை செய்தனர்.