பங்குச்சந்தை தரகரை கடத்தி பணம்கேட்டு மிரட்டல்… திமுக பிரமுகர் உள்பட 4 பேர் கைது…

 

பங்குச்சந்தை தரகரை கடத்தி பணம்கேட்டு மிரட்டல்… திமுக பிரமுகர் உள்பட 4 பேர் கைது…

ஈரோடு

ஈரோட்டில் பங்கு சந்தை தரகரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி எல்.எம்.பாலப்பாளையத்தை சேர்ந்தவர் சாமுவேல்சுரேன். இவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்று முதலீடு செய்துள்ளார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

முதலீட்டாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு அளித்து வந்ததால், கோபி பகுதியில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி வெளியே சென்ற சாமுவேல் சுரேன் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி நர்மதா கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார்.

பங்குச்சந்தை தரகரை கடத்தி பணம்கேட்டு மிரட்டல்… திமுக பிரமுகர் உள்பட 4 பேர் கைது…

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் சுரேனை தேடி வந்தனர். இந்த நிலையில், கவுந்தப்பாடி, காஞ்சிக்கோவில் பிரிவு அருகே வந்த 2 கார்களை போலீசார் தடுக்க நிறுத்த முயன்றனர். அப்போது, காரில் இருந்து சாமுவேல் சுரேனை கீழே தள்ளிவிட்டு, கடத்தல்காரர்கள் தப்பியோட முயன்றனர்.

அவர்களை சுற்றிவளைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பிடாரியூர் பஞ்யாத்து துணைத் தலைவர் சுப்பிரமணியம் (36), ஈஸ்வரமூர்த்தி (39) மற்றொரு சுப்பிரமணியன் (47) மற்றும் பிரபாகரன் ஆகியோரை கைதுசெய்தனர்.

விசாரணையில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய லட்ச கணக்கில் பணம் பெற்ற சாமுவேல் சுரேன் திருப்பி தராததால் அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து, 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.