4 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பரில் ஏற்றம் கண்ட முக்கிய 8 துறைகள் உற்பத்தி! மந்தநிலையிலிருந்து மீளும் பொருளாதாரம்……

 

4 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பரில் ஏற்றம் கண்ட முக்கிய 8 துறைகள் உற்பத்தி! மந்தநிலையிலிருந்து மீளும் பொருளாதாரம்……

தொடர்ந்து நான்கு மாதங்களாக சரிவு கண்டு வந்த முக்கிய 8 துறைகள் உற்பத்தி கடந்த டிசம்பரில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரையிலான 4 மாதங்களிலும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடும் சரிவை சந்தித்தது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. இந்நிலையில் அதற்கு மருந்து போடும் விதமாக கடந்த டிசம்பரில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் ஆலை

கடந்த டிசம்பரில் முக்கிய 8 துறைகளில் நிலக்கரி, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது இதனால் அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் 2018 டிசம்பர் மாத முக்கிய 8 துறைகள் உற்பத்தி வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் இது குறைவுதான்.  2018 டிசம்பரில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 2.1 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நிலக்கரி

கடந்த டிசம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி வளர்ச்சி கண்டு இருப்பது நாடு பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வர தொடங்கியுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும், கடந்த டிசம்பரில் முக்கிய 8 துறைகளின உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.