பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்றுங்க.. போர்க்கொடி தூக்கும் 34 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்..
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் டெல்லி தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
பஞ்சாப் காங்கிரசின் உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதிக்கொண்டு இருந்த நவ்ஜோத் சிங் சித்துவை அம்மாநில காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்தார். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நவ்ஜோத் சிங் சித்துவும் அவரது ஆதரவாளர்களும் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் அவரது அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நவ்ஜோத் சித்துவின் ஆலோசகர்கள் சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து அவர்களை முதல்வர் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார். இதன் விளைவாக நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளர்கள் 4 மாநில அமைச்சர்கள் உள்பட 34 காங்கிரஸ் அமைச்சர்கள் முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், முதல்வரை மாற்றுவது கட்சியின் மேலிடத்தின் உரிமை. ஆனால் நாங்கள் அவர் (அமரீந்தர் சிங்) மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று தெரிவித்தார். பஞ்சாப் அமைச்சர் பஜ்வா கூறுகையில், அமரீந்தர் சிங்குக்கு பதிலாக மற்றொரு நபரை முதல்வராக நியமன் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே நேற்று நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் அலுவலகத்தில் திரிபாத் பாஜ்வா மற்றும் கட்சியின் பிற தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தினார். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் வட்டாரம் மிகவும் பரபரப்பாக உள்ளது.