33 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை மட்டும்தான் வேலை! – வரப்போகிறது புதிய சட்டம்
மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது மற்றும் பணிக்காலத்தை நிர்ணயம் செய்து புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் ஓய்வு பெறும் வயது பற்றிய புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் நிதித்துறை முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளன. இதன் படி, ஒருவர் 33 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை மட்டுமே மத்திய அரசு பணியில் இருக்க முடியும். 33 ஆண்டுகள் முடிந்தவுடன் தானாக அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார். ஒருவர் 22 வயதில் மத்திய அரசு பணியில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 55 வயது ஆகும்போது, அவர் தன்னுடைய பணியின் 33வது ஆண்டை முடிப்பார். அப்போது அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார்.
இதுவே ஒருவர் 35 வயதில் சேர்ந்தால், அவருக்கு 60 வயது ஆகும்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார். ஆனால், அவர் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். 33 ஆண்டுகள் பணி நிறைவு அல்லது 60 வயது நிறைவு இதில் எது முதலில் வருகிறதோ, அதன் அடிப்படையில் அவர்களுக்கு பணியிலிருந்து ஓய்வு அளிக்கப்படும்.
இந்த சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் நாட்டில் ஏராளமானோர் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், மத்திய அரசு பணிகள் மேலும் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.