நெல்லையில் வங்கி ஊழியர் வீட்டில் 32 சவரன் நகைகள் கொள்ளை!

 

நெல்லையில் வங்கி ஊழியர் வீட்டில் 32 சவரன் நகைகள் கொள்ளை!

நெல்லை

நெல்லையில் வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகர் ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பாஸ்கர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று காலை அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

நெல்லையில் வங்கி ஊழியர் வீட்டில் 32 சவரன் நகைகள் கொள்ளை!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாஸ்கர், பாளையங்கோட்டை காவல் நியைத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மகாராஜநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.