300 கொடுத்தா கேஸ், 2,000 கொடுத்தா மாஸ்; ஆண்டிபட்டி தேனியில் அதிமுகவினர் அராஜகம்?!..
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் ஓப்பனாக வாக்குக்கு 2,000 ரூபாய் வழங்குகிறார் என சமூக வலைதளங்களிலேயே பலர் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. அமமுக தரப்பினர் மீது மட்டும் விரைவாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள், ரவீந்திரநாத்-ஐ விசாரணை கூட செய்யவில்லை.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் வாக்குக்கு பணம் வழங்கப்படுவதை தடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸில் ஈவிகேஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அதே போல் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவின் சார்பில் ஜெயக்குமார், திமுக சார்பில் மகாராஜன் மற்றும் அதிமுக சார்பில் லோகிராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
நேற்று இரவு ஆண்டிப்பட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா எனச் சோதனை செய்யச் சென்ற காவல்துறையினருக்கும் அமமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அமுகவினரை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி சுட்டதில், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை 1.50 கோடி ரூபாய் பரிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஏரியா வாரியாக ஒரு நபருக்கு 300 ரூபாய் கொடுப்பதற்காக பண்டில் போடப்பட்ட நிலையில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமமுகவை சேர்ந்த பழனி , பிரகாஷ் ராஜ், மது உள்ளிட்ட பலர் மீது காவல்துரையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமமுக வேட்பாளர் ஜெயக்குமார், நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் காவல்துறையினர் வந்தார்கள், அது அதிமுகவின் பணம் என்றார். இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளரும், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தங்கத் தமிழ்ச்செல்வன் இந்த பிரச்னை குறித்து பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து தங்கத் தமிழ்ச்செல்வன், எங்கள் அலுவலகம் இருக்கும் கட்டிடம் அதிமுக பிரமுகர் அமரேசன் என்பவருக்கு சொந்தமானது. அதிமுக பிரமுகர் கட்டிடத்தில் நாங்கள் ஏன் பணத்தை வைக்க போகிறோம். தோல்வி பயத்தில் அவர்களே பணத்தை வைத்துவிட்டு எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். ரெய்டு நடக்கும் இடத்தில் எதற்கு லைட்டை அமர்த்த வேண்டும், எதற்கு துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்றார்.
மேலும் அவர், தேனி பகுதியில் அதிமுகவினர் 150 கோடி ரூபாய்க்கு மேல் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக வீடியோக்கள் கூட இருக்கிறது, ஆனால் நடவடிக்கை எடுக்க ஆளில்லை. காவல்துறை ஓபிஎஸ்ஸின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது, தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்பாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் ஓப்பனாக வாக்குக்கு 2,000 ரூபாய் வழங்குகிறார் என சமூக வலைதளங்களிலேயே பலர் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. அமமுக தரப்பினர் மீது மட்டும் விரைவாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள், ரவீந்திரநாத்-ஐ விசாரணை கூட செய்யவில்லை.
இதையும் வாசிக்க: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி: தலையை வெட்டி ஊர்வலம் எடுத்து சென்ற கணவன்: அதிர வைக்கும் வாக்குமூலம்!