ஆரணி கோயிலில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தை மீட்பு!

 

ஆரணி கோயிலில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தை மீட்பு!

திருவண்ணாமலை

ஆரணி நகரில் உள்ள கோவிலில் பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையை மர்மநபர்கள் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிபாளையம் காந்தி ரோட்டில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள நவகிரக சன்னிதி அருகே நேற்று பிற்பகல் பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை யாரும் எடுக்காததால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

ஆரணி கோயிலில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தை மீட்பு!

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவிலுக்கு வந்த பக்தர் யாரோ ஒருவர் குழந்தையை விட்டுச்சென்றது தெரிய வந்தது. மேலும், குழந்தை நலமுடன் இருப்பதை அறிந்த போலீசார், அதனை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, குழந்தையை கோவிலில் விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வுசெய்து வருகின்றனர். பட்டப்பகலில் கோவிலில் பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.