திருப்பூரில் அடுத்தடுத்து 2 கார்கள் மீது லாரி மோதல்- ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

 

திருப்பூரில் அடுத்தடுத்து 2 கார்கள் மீது லாரி மோதல்- ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

திருப்பூர்

திருப்பூர் அருகே ஓட்டுநர் மதுபோதையில் இயக்கிய லாரி அடுத்தடுத்து 2 கார்களின் மீது மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு இன்று காலை கதிரவன் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். அவர் மது அருந்திவிட்டு வாகனத்தை, இயக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி எதிரே வந்த 2 கார்களின் மீது அடுத்தடுத்து மோதியது.

திருப்பூரில் அடுத்தடுத்து 2 கார்கள் மீது லாரி மோதல்- ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

இதில் லாரியின் அடியில் கார் சிக்கி கொண்டதில், அதில் பயணித்த கார்த்திகேயன், அவரது மனைவி சரண்யா மற்றும் 7 வயது மகள் தனியா ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

தகவல் அறிந்து விபத்து பகுதிக்கு வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார், கிரேன் உதவியுடன் லாரியின் அடியில் சிக்கிய காரில் இருந்த மூவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநர் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.