வத்தலகுண்டு அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

 

வத்தலகுண்டு அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே காரில் கஞ்சாவை கடத்திச் சென்ற 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், வத்தலகுண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலையரசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வத்தலகுண்டு அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

அப்போது, வெரியப்பநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக காரில் நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவர்களது காரில் சோதனையிட்டனர். அப்போது, காரின் உள்ளே விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் 6 கிலோ கஞ்சா, 60 ஆயிரம் ரூபாய் பணம், 3 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிவமாயன்(40), பாண்டி(40) மற்றும் கூல்மாயன் ஆகியோரை கைதுசெய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.