3 வயது சிறுமி வாயில் பட்டாசு வெடித்த இளைஞர்: உயிருக்கு போராடும் அவலம்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

3 வயது சிறுமி வாயில் பட்டாசு வெடித்த இளைஞர்: உயிருக்கு போராடும் அவலம்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் 3 வயது குழந்தை வாயில், பட்டாசு வைத்து இளைஞர் ஒருவர் வெடித்துள்ளார். 

அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் 3 வயது குழந்தை வாயில், பட்டாசு வைத்து இளைஞர் ஒருவர் வெடித்துள்ளார். 

மீரட் நகர் அருகே மிலாக் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். வடமாநிலங்களில் நேற்று தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட்டதையடுத்து சசிகுமாரின் 3 வயது மகள் தவுராலா சாலையில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞர் சிறுமியை அழைத்து ‘சுட்லி’  பட்டாசை வாயில் வைத்து வெடித்துள்ளார்.

பட்டாசு வெடித்ததும், சிறுமியின் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியதில் அலறித்துடித்தார். இதையடுத்து, சிறுமியின் தந்தை சசிகுமார், சிறுமியைத் தூக்கிக்கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். சிறுமிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரின் வாயில் 50க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளனர். இருந்தபோதிலும், சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் தந்தை சசிகுமார், தனது மகள் வாயில் பட்டாசு வைத்து வெடித்த ஹர்பால் மீது மீரட் நகர போலீசில் புகார் அளித்தார். புகார் பெற்றுக்கொண்ட போலீசார்  வழக்குப்பதிவு செய்து, ஹர்பாலை தேடி வருகின்றனர். ஹர்பால் தலைமறைவாக இருப்பதால், அவரைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.