3-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மிச்சம்!

 

3-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மிச்சம்!

நாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மீதமுள்ளது.

நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

நேற்றைய 4-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலக்கை சேஸ் செய்ய முயற்சித்தது. ஆனால், அந்த அணியின் முதல் 4 விக்கெட்டுகள் மள, மளவென சரிந்தது. இதனால் அந்த அணி 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பும்ரா பிரித்தார். அணியின் ஸ்கோர் 231-ஆக இருக்கும்போது ஜாஸ் பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரியத் தொடங்கியது. பும்ரா அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 210 ரன்கள் மிச்சமுள்ளது. 

ஆனால், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், இந்தியாவின் வெற்றி 90 சதவீதம் உறுதியாகியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்அந்நாட்டு மண்ணில் வெற்றி பெற்ற 6-வது இந்திய கேப்டன் என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார்.