3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: கோரிக்கை வைத்த திமுக; நிராகரித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு வரும் 28 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு வரும் 28 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 தொகுதி சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்த 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதில் திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸூக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரும் படிவத்தில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கையெழுத்துக்குச் சந்தேகத்திற்குரியது என திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. ஒட்டப்பிடாரம் வழக்கையும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார்.
எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் 3 தொகுதிகளில் தேர்தலை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் திடீரென உயிரிழந்ததையடுத்து, சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
வழக்கு விசாரணை 28 ஆம் தேதி நடைபெறும்
இந்நிலையில், திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் நாளைய தினமே வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் வழக்கு விசாரணை வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. முன்னதாக காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: மருத்துவக் கல்லூரியில் குட்டைப்பாவாடை அணியத் தடை – போராட்டத்தில் குதித்த மாணவ மாணவியர்