புவியியல் ரீதியாக தமிழகத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.. வெடிக்கும் ஜோதிமணி
தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று புதுச்சேரி மாதிரி தனி யூனியன் பிரதேசமாக உருவாக்க பாஜக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் பரவுகின்றன. திமுகவின் ’ஒன்றிய அரசு’முழக்கத்திற்கு எதிராக பாஜக கொடுக்கும் பதிலடி இது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
கொங்குநாடு முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி, ‘’தமிழினம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான மொழி,வரலாறு,பாரம்பரியம் உடையது. அதை அழிப்பதற்கு பாஜக துடிப்பது நாம் அறிந்ததே . கீழடியில் இருந்து செம்மொழி ஆய்வு மையம் வரை உதாரணங்கள் குவிந்துகிடக்கின்றன. தமிழக மக்கள் அன்பை, ஒற்றுமையை, அமைதியை, உழைப்பை, சுயமரியாதையை, தைரியத்தை நம்புகிறவர்கள். ஆகவே பாஜக / ஆர். எஸ். எஸ். ஆல் தமிழகத்தை மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலால் வெல்ல முடியவில்லை. அழுத்தத்திற்கும் தமிழகம் பணிவதில்லை. ஆகவே இப்பொழுது புவியியல் ரீதியாக தமிழகத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்’’என்று வெடித்திருக்கிறார்.
அவர் மேலும், ‘’தொழில் வளர்ச்சியில் கோலாச்சிய கொங்கு மண்டலம் மோடி ஆட்சியில் உருக்குலைக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ் டி, தொழிலுக்கு ஆதரவின்மையால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். மீதமுள்ள உழைப்பையும்,வளத்தையும் சுரண்ட துடிக்கிறார்கள். தமிழகத்தை தங்களது நாசகார அரசியலுக்காக துண்டாடத்துடிக்கும் துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழகம் அடையாளம் கண்டுகொள்ளும்.
தமிழகத்தில் நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகளே அதற்கு சாட்சி. கொங்கு மண்டலத்திலும் பாஜக கூட்டணி பட்ட அடி சாதாரணமானதல்ல. தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவின் தொன்மையான, வரலாற்றுச் சிறப்புமிக்க பல இனங்களை பாஜக ஆர். எஸ். எஸ் குறிவைக்கிறது. தடுப்பூசி முதல் நீட் தேர்வு வரை தமிழகத்திற்கு மோடி அரசு இழைத்திருக்கும் துரோகம் கொஞ்சநஞ்சமல்ல. ஒற்றுமையான,வலிமையான தமிழகமே உறுதியோடு இந்த அழிவுசக்திகளை எதிர்கொள்ள முடியும்.’’ என்கிறார்.
’’உத்திரப்பிரதேசம் தமிழகத்தை விட 27 மடங்கு மக்கள் தொகை கொண்டது. உலகின் நான்காவது பெரிய நாடு. அதை நான்காக பிரிக்கவேண்டும் என்று உ.பி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் மத்தியிலும் கோரிக்கை வலுக்கிறது. பிஜேபி ஆட்சி நடக்கிறது தேவையுள்ள அந்த மாநிலத்தை பிரிக்கலாமே. ’’ என்று கேட்கும் ஜோதிமணி, ‘’ பாஜக/ ஆர். எஸ். எஸ் சித்தாந்தத்திற்கு, சூழ்ச்சிக்கு, துரோகத்திற்கு அடிபணிய தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியினர் என்பதை பிரிவினைவாத பாஜகவினர் நினைவில் கொள்ளவேண்டும்.
கொங்கு மண்டலத்திற்கு இன்றைய தேவை மோடி ஆட்சியில் உருக்குலைந்த தொழில்கள், வேலைவாய்புகள் உடனடியாக மறு உருவாக்கம் செய்யப்படவேண்டும். தமிழகம் முழுவதுவே சிறு குறு நடுத்தர தொழில்கள் அழிந்து கிடக்கின்றன.அதைப் புணரமைக்க தமிழகத்திற்கு பத்துலட்சம் கோடி ரூபாயை தமிழக பாஜகவினர் பெற்றுவரட்டும். ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு மட்டுமே தமிழகத்தில் இடமுண்டு. பிரிவினைக்கும் துரோகத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை. ஒரு மாநிலம் பிரிக்கப்படவேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவுசெய்வார்கள். பாஜகவினர் அதிகாரவெறியால் அரசியல் முடிவு செய்ய முடியாது’’ என்று அறிவுறுத்துகிறார்.