மீண்டும் சொல்கிறேன்; அது பெரும் அநீதி; அது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்- அன்புமணி

 

மீண்டும் சொல்கிறேன்; அது பெரும் அநீதி; அது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்- அன்புமணி

சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப் பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசு கட்டமைப்பை தனியாரிடம் தாரை வார்ப்பது நியாயமற்றது என்கிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

மீண்டும் சொல்கிறேன்; அது பெரும் அநீதி; அது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்- அன்புமணி

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் அல்லது தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திடம் ஆலையை ஒப்படைப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனையை தமிழக அரசு பரிசீலிக்கத் தயங்குவதும், தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதும் ஏன்? எனப் புரியவில்லை என்று கேள்வி எழுப்பும் அன்புமணி,

தமிழ்நாடு அரசு தனியாரிடமிருந்து மூன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. இவற்றை ஜூலை மாதத்தில் தொடங்கி திசம்பர் மாதத்திற்குள் வினியோகிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட, இதற்காக குறைந்தது ரூ.1500 கோடி செலவாகக் கூடும்.

இந்தத் தொகையைக் கொண்டு செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, தனியாரிடம் வாங்க திட்டமிட்டிருப்பதை விட பல மடங்கு தடுப்பூசிகளை தயாரித்து விட முடியும். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் அடுத்த 3 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க முடியும் என்பதாலும், மாதத்திற்கு 5 கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை விட கூடுதலான தடுப்பூசிகளை 4 மாதங்களில் தயாரித்து விட முடியும் என்கிறார்.

மீண்டும் சொல்கிறேன். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அரசிடம் தான் இருக்க வேண்டும். அது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். ஒவ்வொரு ஆண்டும் 2.9 கோடி கருவுற்ற பெண்களுக்கும், 2.67 கோடி சிசுக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்கு தேவையான 7 தடுப்பூசிகளையும் இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும், இவ்வளாகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால், இந்த தடுப்பூசிகளை தனியாரிடமிருந்து தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அது பெரும் அநீதி ஆகும். அது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அன்புமணி,

சென்னை கிண்டியில் தமிழக அரசுக்கு சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் இருப்பதைப், போல செங்கல்பட்டு வளாகமும், தமிழக அரசின் இரண்டாவது தடுப்பூசி உற்பத்தி வளாகமாக செயல்படலாம். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைந்துள்ள 100 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தான் மத்திய அரசுக்கு வழங்கியது என்பதால் அதில் தமிழக அரசுக்கு கூடுதல் உரிமை உள்ளது.

ஆகவே, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து விட்டு, அந்த வளாகத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன் என்கிறார் அழுத்தமாக.