நான்கு தாமரைகள்: கமலாலயம் டூ கலைவாணர் அரங்கம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நான்கு பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனால், தமிழ் மண்ணில் தாமரை மலர்ந்தது, 20 ஆண்டுகளூக்கு பின்னர் மீண்டும் சட்டமன்றத்திற்குள் அடியெடித்து வைக்கிறது பாஜக என்று அக்கட்சியினர் கொண்டாடினர்.
அந்த நான்கு எம்.எல்.ஏக்களும் இன்று கலைவாணர் அரங்கில் நடந்த 16வது அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடரில் பதவிப்பிரமணம் செய்துகொண்டனர். முன்னதாக நான்கு பேரும் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்று அங்கு இறைவணக்கம் செய்துவிட்டு, நிர்வாகிகளிடன் வாழ்த்துக்களோடு கலைவாணர் அரங்கத்திற்கு சென்றனர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘’பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க உள்ள காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சிகே சரஸ்வதி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.கவின் குரல் ஒலிக்க இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்கள் பணியை சிறப்புடன் நிறைவேற்றிடவும், தொகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்திடவும் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
’’சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கவிருக்கும் நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
எங்கே தாமரை என்றோருக்கு இங்கே தாமரை என தடம் பதிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராமும் நான்கு பேருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ‘’பாரதிய ஜனதா கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி நன்றி. தமிழக சட்டசபைக்குள் நான்கு பாஜக mlaகளாக செல்லும் நாங்கள் , தமிழக உரிமைக்காக ஓங்கி ஒலிப்போம். குரல் அடக்கப்பட்ட பல்வேறு நலிந்த மக்களின் குரலுக்கு இனி சட்டசபையில் குரல் உண்டு’’ என்று தெரிவித்துள்ளார்.