’’எதிர்க்கட்சியாக..’’ -சீமான் அளிக்கும் உறுதி

 

’’எதிர்க்கட்சியாக..’’ -சீமான் அளிக்கும் உறுதி

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டு 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.1 வாக்கு விழுக்காடு அடைந்தது. கடந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 16,45,185 வாக்குகளைப் பெற்று ஏறத்தாழ 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. நடந்து முடிந்துள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 30,41,974 வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது அரசியல் கட்சியாக வளர்ந்திருக்கிறது.

’’எதிர்க்கட்சியாக..’’ -சீமான் அளிக்கும் உறுதி

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’கடந்த 11 ஆண்டுகளில் தமிழக அரசியல் பரப்பில் நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தியிருக்கிற அதிர்வுகள் சாதாரணமானவையல்ல. 2016 சட்டமன்றத் தேர்தலில் சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்து நல்லரசியலை விதைக்கத் தொடங்கினோம். 2019 பாராளுமன்றத் தேர்தலில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடம் ஆண்களுக்கு 20 இடம் பெண்களுக்கு எனப் பாலினச் சமத்துவத்தைப் பேணி, இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் மாபெரும் முன்னெடுப்பை நிகழ்த்திய முதன்மை அமைப்பாக நாம் தமிழர் கட்சி தலைநிமிர்ந்து நின்றது.

’’எதிர்க்கட்சியாக..’’ -சீமான் அளிக்கும் உறுதி

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கான இடம், பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம், இசுலாமியச் சொந்தங்களுக்கு மற்ற கட்சிகளைவிட அதிக வாய்ப்பு, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கின்ற பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் வேட்பாளராக நிற்கின்ற சம உரிமை என மற்ற எந்தக் கட்சியும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களை நாம் தமிழர் கட்சி துணிந்து செய்தது. கூட்டணி இல்லாமல், தனித்துவமானக் கொள்கைகளை முன்வைத்து, படித்த இளைஞர்கள், எளியப் பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி இத்தேர்தலை மிக எழுச்சிகரமாகச் சந்தித்தபோது கிடைத்த ஆதரவு, மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற புத்தெழுச்சியை வழங்கியது’’ என்கிறார்.

’’எதிர்க்கட்சியாக..’’ -சீமான் அளிக்கும் உறுதி

’’கோடி கோடியாய்க் கொட்டப்பட்ட பணமூட்டைகளுக்கு மத்தியில் எளிய மக்களின் பிள்ளைகளான நாங்கள் பெற்றிருக்கின்ற 30 இலட்சத்திற்கும் மேலான வாக்குகள் என்பது சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளத்தக்க வாக்குகள் மட்டுமல்ல; வரலாற்றின்போக்கில் அடிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மீண்டெழும் என நம்புகிற ஒவ்வொரு தமிழரும் பெற்றிருக்கின்ற நம்பிக்கைத்துளிகள்; இச்சமூகம் செழிக்க ஊன்றப்பட்ட ஆழ விதைகள். பெரும் நம்பிக்கை கொண்டு வாக்குச்செலுத்தி அங்கீகரித்த தாய்த்தமிழ் உறவுகளுக்கு இந்தத் தருணத்தில் எனது அன்பினையும், நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

’’எதிர்க்கட்சியாக..’’ -சீமான் அளிக்கும் உறுதி

’’எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் விளையும் உந்துதலைக் கொண்டு, மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ள வேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும் எனவும், மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும் உறுதியளிக்கிறேன்’’என்கிறார்.