விவேக் உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை..கமல்
நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அவரது உறவினர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது.
மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட விவேக், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘’முற்பகல் 11 மணிக்கு சுய நினைவின்றி மருத்துவமனைக்கு விவேக் கொண்டு வரப்பட்டார். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். இது சாதாரண கார்டியாக் அர்ரெஸ்ட் தான். இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி ஏதும் மில்லை’’ என தெரிவித்தார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘’கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.
அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.