“வாய வச்சுகிட்டு சும்மா இருக்க கூடாதா?’’

 

“வாய வச்சுகிட்டு சும்மா இருக்க கூடாதா?’’

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக்கொலை, தேர்தல் முன் விரோதம் காரணமாக நடந்தது என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இந்த இளைஞர்களின் படுகொலைக்கு பாமகதான் காரணம் என்றும், அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார்.

“வாய வச்சுகிட்டு சும்மா இருக்க கூடாதா?’’

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், இந்த பிரச்சனை தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், அரக்கோணம் கொலை சம்பவம் குடிபோதையில் நடந்தது. அந்த படுகொலைக்கு சாதிய மோதல் காரணமில்லை . திருமாவளவன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் புதிதாக ஒரு தகவலைப் பரப்புகிறார்கள் படித்தவர்கள் யாரும் திருமாவளவனை நம்பமாட்டார்கள். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து பலரும், ‘’நாங்கள் படித்தவர்கள்; திருமாவளவனை நம்புகிறோம்’’என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும், திருமாவளவனை நம்புகிறோம் என்று தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

திருமாவளவனுக்கு ஆதரவாக பலரும் இப்படி தெரிவித்து, ஹேஷ்டேக்குகளையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதனால், ’’படித்தவர்கள் படிக்காதவர்கள் என மக்களைப் பாகுபடுத்தி உயர்வு தாழ்வு காண்பது சனாதனப் புத்தியின் விளைச்சலாகும். படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்விபெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள்.

அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல. நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்’ என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.’’என்று தெரிவித்திருக்கிறார் திருமா.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் அருணன், “வாய வச்சுகிட்டு சும்மா இருக்க கூடாதா? படிச்சவங்க எல்லாம் கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க” என்று பாமகவினர் புலம்புகிறார்களாம்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.