முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இது முதல் அலையைக் காட்டிலும் மிக வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது.
கடந்த இரண்டு தினங்களாக ஒரு லட்சத்துக்கும் மேலே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கவலையை அதிகரித்திருக்கிறது. தினசரி பாதிப்பு இப்போது ஒரு லட்சத்தை கடந்து விட்டதால் நாடெங்கிலும் பெரும் அச்சம் நிலவுகிறது.
தமிழகம், கர்நாடகா, மராட்டியம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் சில முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 6ஆம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று இதுதொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின்னரே இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.