இது வேற லெவல் அரசியல் ; ரஜினிக்கு நன்றி சொன்ன அர்ஜூனமூர்த்தி

 

இது வேற லெவல் அரசியல் ; ரஜினிக்கு நன்றி சொன்ன அர்ஜூனமூர்த்தி

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக சொன்னதும் பாஜகவில் இருந்து விலகி வந்தார் அர்ஜூனமூர்த்தி. அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பும் கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், சில காரணங்களால் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று, அறிவித்ததுமே சில வாரம் மவுனமாக இருந்த அர்ஜூனமூர்த்தி, தான் ஒரு புதிய கட்சியை தொடங்க போவதாக அறிவித்தார். அதன்படியே இன்று சென்னை கோயம்பேட்டில் ‘’இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’’ என்று புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

இது வேற லெவல் அரசியல் ; ரஜினிக்கு நன்றி சொன்ன அர்ஜூனமூர்த்தி

’’இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல், தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை… ஆணவத்தால் வரும் மதமும் இல்லை…’’ தன் புதிய கட்சி குறித்து அர்ஜூனமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், ’’சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற முப்பெரும் தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு, தமிழ் உள்ளங்களில் பட்டொளி வீசி பறக்கும் இ.ம.மு.க-வின் கொடி, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வடிவம் கொண்டது. தமிழ் இளைஞர்களின் கனவுகளை சுமந்து இனி களமாடும் எமது கொடி ’’என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது வேற லெவல் அரசியல் ; ரஜினிக்கு நன்றி சொன்ன அர்ஜூனமூர்த்தி

‘’இன்று தனி அரசியல் கட்சித் துவங்கியிருக்கும் திரு.அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்’’ என்று நடிகர் ரஜினிகாந்த், அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

’’உங்களால் அடையாளப்பட்டு, உங்கள் நட்பினால் மதிக்கப்பட்டு, இன்று உங்கள் ஆசியினால் உயர்வு பெற்றேன். என் மனப்பூர்வமான நன்றிகள்’’ரஜினிக்கு அர்ஜூனமூர்த்தி நன்றி தெரிவித்திருக்கிறார்.