2,100 விவசாயிகளின் கடனை அடைத்த சூப்பர் ஸ்டார்!
2,100 பீகார் விவசாயிகளின் வங்கி கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.
மும்பை: 2,100 பீகார் விவசாயிகளின் வங்கி கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.
விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பீகாரிலும் விவசாயிகள் பலர் வங்கி கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த செய்தியை அறிந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவர்களின் கடன்களை தான் அடைக்க போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், பீகாரில் வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்ற விவசாயிகளில் 2,100 பேரை தேர்வுசெய்தார்.பின்பு அவர்களை நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்த அவர், கடன்களை அடைப்பதற்கான தொகையை தமது மகள் ஷ்வேதா மற்றும் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோரின் மூலமாக அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகார் விவசாயிகள் 2,100 பேரின் கடன் அடைக்கப்பட்டு விட்டது. மேலு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கும் நிதியுதவியை விரைவில் அளிப்பேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக உத்தரபிரதேசத்தில் 1,398 விவசாயிகள் மற்றும் மகாராஷ்டிராவின் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களையும் அமிதாப் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.