21 பேரை கொன்ற தாய்லாந்து ராணுவ வீரர் சுட்டுக் கொலை!
பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளதாகவும், அடிக்கடி அங்கு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகின.
வணிக வளாகத்தில் புகுந்து 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரரை அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
தாய்லாந்தின் நகோன் ராட்சசிமா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று உள்ளது. ராணுவ வீரரான மேஜர் ஜக்ரபந்த் தொம்மா நேற்று துப்பாக்கியுடன் நுழைந்து அங்கிருந்த பொதுமக்கள் 21 பேரை சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலரையும் அதிரடியாக மீட்டனர். இருப்பினும் மேஜர் ஜக்ரபந்த் தொம்மா வணிக வளாகத்திற்கு வந்தவர்களைக் கீழ்த்தளத்தில் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளதாகவும், அடிக்கடி அங்கு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் வணிக வளாகத்தில் புகுந்து 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ஜக்ரபந்த் தொம்மாவை அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தத் தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அனுடின் உறுதிசெய்துள்ளார். ராணுவ வீரர் ஜக்ரபந்த் தொம்மா ஏன் இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தினார் என்பது தெரியவில்லை. அதேசமயம் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.