இலங்கையில் 20 வது சட்டத்திருத்தம் – ஆதரவும் எதிர்ப்பும் அனல் பறக்கும் விவாதம்
இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்ஷே கட்சியின் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
மகிந்த ராஜபக்ஷே மீண்டும் பிரதமரானார். அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்ஷே அதிபர் என்பது தெரிந்த விஷயமே. ராஜபக்ஷே குடும்பத்தின் பலருக்கும் அரசியல் அதிகாரப் பொறுப்புகள் அளிக்கப்பட்டதாக புகாரும் எழுந்தது.
இலங்கையின் 19- வது சட்டத்திருத்ததை நீக்கி, 20-வது சட்டத் திருத்தம் செய்ய பாராளுமன்றத்தில் ராஜபக்ஷே கட்சி முயற்சி மேற்கொண்டது. பெரும்பான்மை இருப்பதால் எளிதாக இது சாத்தியம்தான் என்று பேசப்படுகிறது.
20-வது சட்டத்த்திருத்தம் அதிபருக்கு வானளவிய அதிகாரத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு அதை அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம் என்றும், அமைச்சர் பதவியை நீக்கும் அதிகாரமும் அதிபருக்கு உண்டு போன்ற பல அதிகாரங்கள் அதிபருக்கு அளிக்கிறது இந்தச் சட்டத்திருத்தம்.
இந்தச் சட்டத்திருத்ததிற்கு இலங்கை எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அலவத்துவல, ‘இந்த சட்டத் திருத்ததிற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு அளிக்காது’ என்று கூறியுள்ளது. மேலும், இந்தச் சட்டத்திருத்தத்தை உருவாக்கியவர் யார் என்று சொல்லக்கூட ஆளும் கட்சிக்கு துணிவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷே, ’19-ம்வது சட்டத்திருத்தம் அவசரம் அவசராகக் கொண்டு வரப்பட்டது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவே 20 –வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், எந்த இனத்தையும் இலக்காகக் கொண்டு இது ஏற்படுத்தபட வில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.