20% நிம்மதியளிக்கிறது… ராமதாஸ்

 

20% நிம்மதியளிக்கிறது… ராமதாஸ்

சென்னையில் கடந்த 12-ஆம் தேதி 7564 ஆக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் கொரோனா தொற்று 1317 குறைந்துள்ளது. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப் பட்டு வரும் நிலையிலும் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று விகிதமும் 23 விழுக்காட்டிலிருந்து குறைந்து 20 விழுக்காட்டிற்கும் கீழ் வந்திருப்பது நிம்மதியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

20% நிம்மதியளிக்கிறது… ராமதாஸ்

அவர் மேலும், இத்தகைய தருணத்தில் தமிழக அரசு நோய்த்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றை விரைவாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதற்கான முதல் பணி சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்துவது தான் என்கிறார்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக சராசரியாக தினசரி 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சோதனை செய்யப்படாமல் கொரோனா தொற்றுடன் நடமாடிக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 1.8 பேருக்கு நோயைத் தொற்றச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று சொல்லும் ராமதாஸ், அத்தகைய சூழலில் அதிக எண்ணிக்கையில் சோதனைகளை செய்யும் போது நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு குணப்படுத்த முடியும்; அதன் மூலம் அவர்கள் வழியாக பிறருக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். சென்னையில் கொரோனா சோதனை எண்ணிக்கையை தினசரி 50,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் அதிக அளவிலான சோதனைகளை செய்ததன் மூலம் தான் கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது. அதன்பின்னர் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் பயனாகவே புதியத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடிந்தது என்றும் சொல்லும் ராமதாஸ், அதேபோல், சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது வேண்டுகோளை முன்வைக்கிறார்.