2025ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர்: அணுகுண்டுகள் விழுந்த உடனே 12.50 கோடி பேர் பலியாவார்கள் -எச்சரிக்கும் ஆய்வு

 

2025ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர்: அணுகுண்டுகள் விழுந்த உடனே 12.50 கோடி பேர் பலியாவார்கள் -எச்சரிக்கும் ஆய்வு

2025ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நிகழ வாய்ப்புள்ளது. அணுகுண்டுகள் விழுந்த உடனே 12.50 கோடி பேர் பலியாவார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்க்கா வரப்பு சண்டை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. 
காஷ்மீர் விவகாரத்தை வைத்து தங்களது மக்களை ஏமாற்றி வந்த பாகிஸ்தான் அரசுக்கு இது பெரிய அடியாக விழுந்தது. இந்த கடுப்பில் சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பேசி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இம்ரான் கான்

இந்தியா மீதான பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டை சீனாவை தவிர வேறு எந்த நாடுகளும் காது கொடுத்து கேட்கவில்லை. இதனால்  இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படலாம் என உலக நாடுகளை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மிரட்டி வருகிறார். இந்த மிரட்டல் ஒருநாள் நிஜமாக வாய்ப்புள்ளதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.

அமெரிக்காவில் உள்ள நியூபர்ன்ஸ்விக் நகரின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலம் ரோபாக், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் ஏற்படும் விளைவு குறித்து ஜர்னல் சயின்ஸ் அட்வான்சஸில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணுஆயுதப் போர் வரக்கூடாது. அப்படி வந்தால் அதனால் அந்த பகுதி மட்டுமல்ல உலகமே பாதிக்கும்.

அணு குண்டு தாக்குதல் (கற்பனை)

உலக அளவில் 9 நாடுகளில் அணுகுண்டுகள் உள்ளன. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே தங்களது அணு ஆயுதபலத்தை அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளும் பல முறை போரில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் அணு ஆயுதப் போரில் இதுவரை ஈடுபடவில்லை. இருப்பினும் 2025ல் இருநாடுகளும் அணு ஆயுதபோரில் ஈடுபட வாய்ப்புள்ளது. அப்படி இருநாடுகளும் அணு ஆயுத போரில் ஈடுபட்டால் ஒட்டு மொத்தத்தில் 500 அணுகுண்டுகளுடன் இருநாடுகளும் மோதி கொள்ளும். 

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்

இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் அது உலகின் பேரழிவாகத்தான் இருக்கும். 2025-ம் ஆண்டில் அணு ஆயுதத்தின் வெடிக்கும் திறன் 15 கிலோடன்னாக மாறும். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு குண்டுபோல் பன்மடங்கு திறன்பெற்றவை.
 போர் தொடங்கியவுடனே இருதரப்பிலும் சேர்த்து 12.50 கோடி பேர் உடனடியாகக் கொல்லப்படுவார்கள்.  அணு குண்டு வீசப்பட்ட இடத்தில் மட்டும் அதன் பாதிப்பு இருக்கப்போவதில்லை அதன் பாதிப்பு ஒட்டுமொத்த உலகத்திலும் எதிரொலிக்கும், பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும்.

அணுகுண்டு தாக்குதலால் உலகளவில் நிலத்தின் தன்மை மாறி  15 முதல் 30 சதவீதம் வரை தாவர வளர்ச்சி குறைந்து விடும், கடல்பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் 5 முதல் 15 சதவீதம் உற்பத்திதிறன் பாதிக்கும். இந்தியா, பாகிஸ்தான் மக்கள் மிகப்பெரிய பட்டினியை, வறட்சியை சந்திப்பார்கள். மேலும் உலகம் பருவநிலை பேரழிவை சந்திக்கும். அப்படி நிகழ்ந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைய குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம். 

பருவ நிலை மாற்றம்

ஆதலால், அணு ஆயுதங்களை எந்தவிதமான இக்கட்டான நிலையிலும் உலக நாடுகள் பயன்படுத்தக்கூடாது அதற்கான நியாயங்களை கற்பித்து பயன்படுத்தவும் கூடாது. இவ்வாறு அதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.