சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.19 லட்சம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.19 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது.

நம் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது, முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.19 லட்சம் கோடி லாபம்
டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,183 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,154 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.237.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.19 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.19 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 363.79 புள்ளிகள் உயர்ந்து 52,950.63 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 122.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,885.15 புள்ளிகளில் முடிவுற்றது.