2019 பிப்ரவரி 7-க்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

 

2019 பிப்ரவரி 7-க்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

திருவாரூர் தொகுதிக்கு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சென்னை: திருவாரூர் தொகுதிக்கு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. விதிமுறைகளின் படி, இந்த தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடதப்பட வேண்டும். ஆனால், இதுவரை தேர்தல் நடத்துவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து மதுரையை சேர்ந்த சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எப்போது நடத்துவீர்கள்? இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? இரு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த கால அட்டவணை ஏதும் உள்ளதா? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி, நவம்பர் 26-ம் (இன்று) தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. அந்த தொகுதிக்கான தேர்தல் தொடர்பான வழக்கு முடிவடைந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.