புகைமூட்டத்தில் பெட்ரோல் ஊற்றியபோது தீப்பற்றியதில், 2 இளைஞர்கள் உடல் கருகி பலி

 

புகைமூட்டத்தில் பெட்ரோல் ஊற்றியபோது தீப்பற்றியதில், 2 இளைஞர்கள் உடல் கருகி பலி

திருச்சி அருகே புகை மூட்டத்தின் மீது பெட்ரோலை ஊற்றியபோது தீப்பற்றியதில் 2 இளைஞர்கள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அடுத்த கிளியனூர்பட்டி தெற்கு கொட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(18). அதே பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சக்திவேல்(23). உறவினர்களான இருவரும் கடந்த 9ஆம் தேதி மாலை வீட்டில் டிவி பார்த்துகொண்டிருந்தனர். அப்போது கொசு கடித்ததால் அவற்றை விரட்ட வீட்டின் முன்பாக குச்சிகளை வைத்து மூட்டம்போட முயன்றுள்ளனர். விறகில் தீ பற்றாததால், இருசக்கர வாகனத்திற்கு வைத்திருந்த பெட்ரோலை மூட்டத்தின் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென மேல் எழுந்த தீயானது இருவரது உடைகள் மீதும் பற்றியது. இதில், மளமளவென உடல் முழுவதும் தீ பரவியதால் இருவரும் அலறி துடித்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் மீது எரிந்த தீயை அணைத்து, உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகைமூட்டத்தில் பெட்ரோல் ஊற்றியபோது தீப்பற்றியதில், 2 இளைஞர்கள் உடல் கருகி பலி

தொடர்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவர்களும் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு உயிரிழந்த நிலையில், நேற்று சக்திவேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.புகை மூட்டம் வைத்தபோது, தீப்பற்றியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்வம் அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.