கார் மீது அரசுப் பேருந்து மோதல் – 2 இளைஞர்கள் பலி!

 

கார் மீது அரசுப் பேருந்து மோதல் – 2 இளைஞர்கள் பலி!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே நேற்றிரவு கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முனியா – பாண்டிசெல்வி தம்பதியினர். இவர்களது மகன் முகேஷ்வரன் (25). கார் ஓட்டுநர். இவர் அதே பகுதியை சேர்ந்த சிவா உள்ளிட்ட 3 பேருடன் நேற்றிரவு ராமேஸ்வரத்துக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே ராம்நகர் பகுதியில் சென்றபோது கார் மீது எதிரே, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கார் மீது அரசுப் பேருந்து மோதல் – 2 இளைஞர்கள் பலி!

மேலும், சிவா உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, பரமக்குடியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் செல்வின் ரஞ்சித்திடம் விசாரித்து வருகின்றனர்.