‘வினையாக அமைந்த மின்வேலி’.. சொந்த நிலத்திலேயே உயிரிழந்த தம்பதி!
பெரம்பலூர் அருகே சொந்த நிலத்தில் அமைத்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக தமிழகத்தின் பல இடங்களில் மின்வேலி அமைக்கப்படுகிறது. ஆனால் மின்வேலியில் சிக்கும் விலங்குகள் பரிதாபமாக உயிரிழப்பதால் அரசு அதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் மின்வேலி அமைக்கப்படுகிறது. சமீபத்தில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே முத்து என்பவர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததால், வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கிய தம்பதி உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்த தம்பதி பெரியசாமி-மலர்க்கொடி. இவர்கள் தங்களது சொந்த வயலில் மின்வேலி அமைத்துள்ளனர். அந்த மின்வேலி அவர்களுக்கே வினையாக அமைந்துள்ளது.
வயலில் இருந்த மின்வேலியை இருவரும் தவறுதலாக தொட்டதால், இருவரையும் மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதில் மலர்கொடியும் அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.