முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக துணை நடிகை சாந்தினி பாலியல் புகார் ஒன்றை அளித்தார். தன்னுடன் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். நடிகை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர். பின்னர், மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

இதையடுத்து ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். இரண்டு நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அடையாறு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. 3 மற்றும் 4ம் தேதிகளில் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் விசாரிக்கவும் அவரது செல்போனை கண்டுபிடிக்கவும் போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மணிகண்டனை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.