கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி; தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்!

 

கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி; தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்!

ஆம்பூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதி லோகேஸ்வரன் – மீனாட்சி. இவர்களது பிள்ளைகள் ஜஸ்வந்த் (8), ஹரி ப்ரீத்தா(6). கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூரை அடுத்த கடம்பூர் பகுதியில் தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் லோகேஸ்வரன். நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தனது குழந்தைகளை அருகில் உள்ள கைலாசகிரி மலை முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் குளத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.

கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி; தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்!

அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுவர்களுமே நீரில் மூழ்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த லோகேஸ்வரன் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கியுள்ளார். எனினும், குழந்தைகள் ஆழமான இடத்திற்கு சென்றதால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. லோகேஸ்வரன் கண்முன்னே இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர்.

மலைப்பகுதியில் குளம் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மேலே வர முடியாத நிலையில், டோலி கட்டி இரண்டு சிறுவர்களது சடலங்களையும் மலையிலிருந்து கீழே எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.