2 நாள்களுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு ரூ.76 ஆயிரம் கோடி லாபம்! சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது…

 

2 நாள்களுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு ரூ.76 ஆயிரம்  கோடி லாபம்! சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது…

தொடாந்து 2 நாளாக சரிவு கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது.

பஜாஜ் பைனான்ஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 

அமெரிக்க பெடரல் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே இந்தியா, ஐ.டி.சி., இன்போசிஸ், டெக் மகிந்திரா மற்றும் எல் அண்டு டி உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ்,, எச்.டி.எப்.சி., அல்ட்ராடெக்சிமெண்ட், டைட்டன் மற்றும் சன்பார்மா உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,280 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,232 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 168 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.17 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 231.80 புள்ளிகள் உயர்ந்து 41,198.66 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 73.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,129.50 புள்ளிகளில் முடிவுற்றது.