2 நாளில் ரூ.100 கோடி; வசூல் ஆட்சி புரியும் விஜய்யின் ‘சர்கார்’!

 

2 நாளில் ரூ.100 கோடி; வசூல் ஆட்சி புரியும் விஜய்யின் ‘சர்கார்’!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் ரிலீசான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.70 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் ‘சர்கார்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவிலும் முதல் நாள் அதிகம் வசூல் செய்த பட்டியலில் இருந்த ரன்பீர் கபூர் நடித்த ‘சஞ்சு’ படத்தின் சாதனையை சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது.

இதுபோன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் அதிகம் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இப்படம் இரண்டே நாட்களில் ரூ.110 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த படங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. முதன்முதலில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. அதைத் தொடர்ந்து ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களிலும், ‘தெறி’ படம் 6 நாட்களிலும், ‘மெர்சல்’ படம் 3 நாட்களிலும், ‘சர்கார்’ 2 நாட்களிலும் ரூ.100 கோடி வசூலை படைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

தளபதி ரசிகர்கள் கொண்டாடி வரும் ‘சர்கார்’ திரைப்படம் அடுத்து வரும் வார இறுதி நாட்களில் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது