2 ஆண்டுகளாக பிச்சை எடுக்கும் கோடீஸ்வரர்…கண்ணீர் விட்டு கதறிய தங்கை!
அம்பலா பகுதியில் உள்ள அனஜ்மண்டி கோவில் வாசலில் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
பிச்சைக்காரன் படத்தில் தனது அம்மாவின் உயிரை காப்பாற்றப் பெரிய பணக்காரராக இருக்கும் விஜய் ஆண்டனி 48 நாட்கள் பிச்சைக்காரராக மாறி பிச்சை எடுப்பார். இந்த கதையானது உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் அஸாம்கர் அருகே உள்ள அம்பலா பகுதியில் உள்ள அனஜ்மண்டி கோவில் வாசலில் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அவரது காலில் அடிபட்டு ரத்தம் வழிந்துள்ளது. அப்போது கோயிலுக்கு வந்த பக்தரான சாஹில் என்பவர் அவரிடம் விசாரித்துள்ளார். அதில் தான் தனஞ்செய் தாகூர், பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் போதை பழக்கத்தால் வீட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாகூரின் நினைவிலிருந்த அவரது சகோதரியின் நம்பருக்கு போன் செய்த சாஹில், தாகூர் குறித்த விவரத்தைக் கூறினார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரின் சகோதரி நேஹா தாகூரை பார்த்து கண்கலங்கி அழுததுடன், அவரை அங்கிருந்து அழைத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.