கண்மாயில் மூழ்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு
சிவகங்கை
சிவகங்கை அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பொய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, அவர் தனது மனைவி மற்றும் மகன் சூர்யா(19) ஆகியோருடன் பொய்யலூர் கிராமத்திற்கு வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் சூர்யா, நண்பர்களுடன் கிராமத்தில் உள்ள கண்மாய்-க்கு சென்று குளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சூர்யா, தண்ணீருக்குள் மூழ்கி மாயமாகினார்.
இதனை கண்டு அருகில் இருந்த இளைஞர்கள் நீரில் இறங்கி தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் காரைக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் சூர்யா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, சூர்யாவின் உடலை கைப்பற்றி கல்லல் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.