ரஜினி, குஷ்புவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

 

ரஜினி, குஷ்புவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

எதை பலிகொடுத்தாவது, எதை இழந்தாவது.. என்று வெடித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி்யின் தலைவர் திருமாவளவன்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி சார்பில் நடந்த உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று பேசிய திருமாவளவன், பாஜகவுக்கு எதிராக ஆவேசமாக வெடித்தார். ரஜினி, குஷ்பு போன்றோருக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

ரஜினி, குஷ்புவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

’’எத்தனை நடிகரை நீங்கள்(பாஜக) களம் இறக்கிவிட்டாலும், எத்தனை நடிகைகளை நீங்கள் களம் இறக்கிவிட்டாலும் இது பெரியார் மண், இது சமூக நீதியால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே வெறும் திரைப்பட கவர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு கண்டால் அது ஒருபோதும் நடக்காது. அண்ணா, கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட மண். இடையிலே பலர் வரலாம் போகலாம். ஆசைப்படலாம் ஆனால் அவர்கள்கனவு பலிக்காது.

அது ஒரு காலம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சியை கைப்பற்றியதற்கு பெரியார் தேவைப்பட்டார், அண்ணா தேவைப்பட்டார் என்பதை மறந்துவிட முடியாது. எம்.ஜி.ஆர். அண்ணாவோடு நெருக்கமாக இருந்தவர். பெரியாரோடும் பழகியவர். அண்ணாவும், பெரியாரும் அவரை தட்டிக்கொடுத்த காலம் இருந்தது. அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ரஜினி, குஷ்புவுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!

அண்ணா, பெரியார் போன்றவர்களின் அனுசரணையும், அரவணைப்பும், வாழ்த்துக்களூம் இருந்த காரணத்தினால் அவர்களால் சமூக நீதி அரசியலை முன்னெடுக்க முடிந்தது. காலூன்ற முடிந்தது. வேறு யாரும் இங்கே கவர்ச்சியை வைத்து அரசியல் செய்துவிடலாம் என்று கனவு காணவேண்டாம் என்பதை எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இது ஏதோ அச்சப்பட்டு, திரைப்பட நடிகர்கள் வந்தால் ஆட்சி மாறிவிடும், கைமாறிவிடும் என்ற அச்சத்தில் சொல்லவில்லை. கொள்கை சார்ந்த நுட்பமான தொலைநோக்கு பார்வையோடுதான் நாங்கள் இதை முன்வைக்கிறோம்.

எதை பலிகொடுத்தாவது, எதை இழந்தாவது தமிழ் மண்ணை காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. அதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் புரிந்துவைத்திருக்கிறோம்.

வட இந்திய மாநிலங்களில் மக்களை ஏமாற்றியது போல, சித்து வேலைகளை செய்து ஆட்சியை கைப்பற்றியது போல, தமிழ்நாட்டிலும் செய்துவிட முடியும் என்று கணக்கு போடும் மோடி, அமித்ஷா கும்பலுக்கு இந்த மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டத்தின் மூலம் எச்சரிக்கை விட கடமைப் பட்டிருக்கிறோம். தேர்தலுக்கான களத்தில் நிற்போம். ஆட்சியை கைப்பற்றுவோம். இந்த மண்ணை காப்பாற்ற ஒருங்கிணைந்திருப்போம்’’என்று வெடித்தார் திருமாவளவன்.