கொரோனா வந்ததும் பெரும்பாலான நடிகர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்த நிலையில், தங்களை தவிர, தங்களது குடும்பத்தை தவிர வேறு யாரையும் நினைத்துப்பார்க்காத நிலையில் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் மட்டும் பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வந்தார்.
ஊரடங்கினால் பஸ் வசதி இல்லாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகு பஸ் வசதி செய்துகொடுத்தார். ரஷ்யாவில் தவித்த தமிழக மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமான ஏற்பாடுகள் செய்துகொடுத்தார்.

மலைக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்கு ஏதுவாக செல்போன் டவர் அமைத்துக்கொடுத்தார். இது தவிர சாப்பாடு வசதி, மருத்துவ வசதி என்று பலருக்கும் உதவி செய்து வந்தார்.
வில்லன் நடிகர் என்றாலும் அவர் செய்த செயல்களை பார்த்து ரியல் ஹீரோ என்று இந்தியாவே அவரை கொண்டாடியது. ஐ.நாவும் அவருக்கு சிறப்பு மனிதநேய செயலுக்கான விருதினை வழங்கி கவுரவித்தது.
கொரோனா காலம் எல்லோரையும் போலவே அவரையும் பாதித்திருக்கிறது. ஷூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் அவருக்கும் நெருக்கடி வந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் உதவிகள் செய்துவந்திருக்கிறார்.
சொத்துக்களை அடமானம் வைத்தும் அவர் உதவிகள் செய்துவந்திருக்கிறார்.
தனது மனையின் பெயரில் உள்ள கடைகள் மற்றும் 6 வீடுகளின் பத்திரங்களை ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் 10 கோடிக்கு அடமானம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கையிலும், பையிலும் இருப்பதையே கொடுக்க மனமில்லாதவர்கள் மத்தியில் சொத்துக்களை அடமானம் வைத்து உதவி வந்ததை நினைத்து பலரும் நெகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.