சசிகலா செய்த சதி! ஜெ.வுக்கு செய்த துரோகம்… அம்பலப்படுத்திய வக்கீல் ஜோதி!
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா செய்த சதி பற்றியும், ஜெ.வுக்கு அவர் செய்த துரோகம் பற்றியும் அம்பலப்படுத்தினார் ஜெயலலிதாவின் வக்கீல் ஜோதி.
ஜெயலலிதாவின் ஆஸ்த்தான வழக்கறிஞராக இருந்தவர் ஜோதி. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் பாதியில் வெளியேறினார் ஜோதி. தான் வெளியேறவில்லை. வெளியேற்றப்பட்டேன் என்று இன்று பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கொள்ளைக்காரி என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சொன்னது ஆதராமற்றது என்பதற்காக தகுந்த ஆதாரங்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜோதி.
அப்போது பேசிய ஜோதி, ‘’நான் ஜெயலலிதாவின் 12 வழக்குகளில் 11 வழக்குகளில் ஆஜராகி, வெற்றி அடைந்தவன். 12வது வழக்கும் வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கும்போது, அந்த குடும்பத்தில் இருந்து உடன்பிறவா சகோதரியாக இருந்த சதிசெயல்களால்நான் வெளியேற்றப்பட்டேன். இந்த வழக்கை குட்டிச்சுவர் ஆக்கணும். அந்த அம்மாவுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தணும் என்கிற நோக்கத்தில்தான் என்னை வெளியே அனுப்பினார் சசிகலா என்ற சந்தேகமெனக்கு இருக்குது’’என்று அதிரவைத்தார்.
மேலும், ‘’அந்த வழக்கில் இருந்து நான் விருப்பப்பட்டு வெளியே வரவில்லை. வெளியேற்றப்பட்டேன். அதனால்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பற்றி ஆ.ராசா தவறாக பேசுவதற்காக வருத்தம் அடைந்து நானே முன்வந்து விளக்கம் அளிக்கிறேன்’’ என்றவர்,
‘’சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யட்பட்டதும், உச்சநீதிமன்றத்தில் திமுக சூழ்ச்சியாக மேல்முறையீடு செய்தது. வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதா இறந்துவிட்டார். அதனால் பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஜெயலலிதா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ‘ஜெயலலிதா’ என்ற பெயர் மட்டுமே இருக்கிறது. அதுவும் கூட சசிகலா செய்த செயலால்தான் இருக்கிறது’’ என்று சொன்ன ஜோதி,
’’ஜெயலலிதா இறந்ததும், அவர் இறந்துவிட்டார். இனிமேல் வழக்கை நடத்த வேண்டாம் என்று ஒரு மெமோவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஏன் இதைச்செய்யவில்லை. ஜெயலலிதாவின் இறப்புசான்றிதழுடன் சசிகலா ஏன் தாக்கல் செய்யவில்லை? ’’என்று கேள்வி எழுப்பினார்.
பிறகு அவரே, ’’சசிகலா, தான் முதல்வர் ஆவதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்த பரபரப்பினால் அதை செய்யவில்லை. தங்கள் சுய லாபத்திற்காக இதைச்செய்யவில்லை. அதைச்செய்திருந்தால் இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பெயரே வந்திருக்காது’’ என்கிறார் அழுத்தமாக.