தேசிய அளவில் நடக்கும் இரண்டு போராட்டங்கள்; வெற்றி பெற அழைக்கும் திருமா

 

தேசிய அளவில் நடக்கும் இரண்டு போராட்டங்கள்; வெற்றி பெற அழைக்கும் திருமா

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகப் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்களை எதிர்த்து நாடு, தழுவிய போராட்டங்களை நடத்துவது என்று தொழிலாளர் அமைப்புகளும் விவசாயிகள் அமைப்புகளும் அறிவிதுள்ளன.

வரும் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் இந்தியாவெங்கும் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.

தேசிய அளவில் நடக்கும் இரண்டு போராட்டங்கள்; வெற்றி பெற அழைக்கும் திருமா

இதுகுறித்து திருமாவளவன், ‘’தொழிலாளர்களின் நீண்டகால போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட 29-தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு 4-தொகுப்புகளாக பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கரால் உறுதிப்படுத்தப்பட்ட 8 மணி நேர வேலை என்பதை ஒழித்துக்கட்டிவிட்டு 12 மணி நேர வேலை என ஒரு கொடுங்கோல் நிலையை இந்தியாவில் அறிமுகப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. அதுபோலவே மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள வேளாண் துறையில் தலையிட்டு விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கிறது’’என்று தெரிவித்துள்ளவர்,

’’இந்த சட்டங்களை எதிர்த்தும், கொரோனா பெருந்தொற்றால் பரிதவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500/- நிவாரணம், மாதம் 10 கிலோ அரிசி வழங்குவதோடு, 100 நாள் வேலைத் திட்ட வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவேண்டுமென்றும் கோரி எதிர்வரும் நவம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதுபோலவே 27ஆம் தேதி டெல்லியில் முற்றுகைப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த இரண்டு அறப் போராட்டங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரிக்கிறோம்’’என்று தெரிவித்துள்ள திருமா,

மேலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்று இந்தப் போராட்டங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.