போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்… பார்த்திபன்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்யக்கோரி நடந்த வழக்கில், 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுத்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்வது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்காக அவரிடம் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்த தீர்மானத்திற்கு இன்னமும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் உச்சநீதிமன்றமே அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.
எழுவரில் பேரறிவாளனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று அவரை விடுதலை செய்ய அவரது தாய் அற்புதம்மாள் போராடி வருகிறார். பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்பினரும், திரையுலக பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
#ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கினையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
’’சட்டம் தன் வாசலைத்திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதியாகும்’’என்று கவலை தெரிவித்திருக்கிறார் அற்புதம்மாள்.
’’அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்’’என்று தெரிவித்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் பார்த்திபன்.