171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன; ஆனாலும் அரசு தனியாருக்கு விற்பது ஏன்? சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி!

 

171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன; ஆனாலும் அரசு தனியாருக்கு விற்பது ஏன்? சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி!

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத் துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் பதில் அளித்துள்ளார்.

171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன; ஆனாலும் அரசு தனியாருக்கு விற்பது ஏன்? சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி!

பொதுத்துறை நிறுவனங்களின் லாபகரமான செயல்பாடு, பங்கு விற்பனை பற்றிய கேள்விகளை சு. வெங்கடேசன் மக்களவையில் எழுப்பியிருந்தார். அக்கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், 171 பொதுத்துறை நிறுவனங்கள் 2019- 20 நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாகவும், அவற்றில் 10 மகாரத்னாக்கள், 14 நவரத்னாக்கள், 73 மினிரத்னாக்கள் உள்ளன என்றும், அவற்றில் மகாரத்னாவாக உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், மினி ரத்னாக்களாக உள்ள ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கன்டைனர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, மினி ரத்னா நிறுவனங்களான பாரத் எர்த் மூவர் லிமிடெட், பவான் ஹான்ஸ் லிமிடெட் ஆகியன கேந்திர விற்பனை வாயிலாக தனியார்க்கு விற்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி “அமைச்சரின் பதில்கள் பொதுத் துறை நிறுவனங்களின் நல்ல செயல்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. தனியார் மயம், பங்கு விற்பனைக்கான நியாயங்களாக எப்போதுமே அரசாங்கம் கூறுவது என்ன? நட்டத்தில் இயங்குகிறது என்பதே. மக்கள் வரிப் பணத்தை குழியில் போட முடியுமா போன்ற வழக்கமான வசனங்கள் வேறு. ஆனால் அமைச்சர் பதிலில் 171 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்பது மட்டுமின்றி 97 நிறுவனங்கள் “ரத்னா” க்களாக உள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினிரத்னா என்றால் மூன்று ஆண்டு தொடர் லாபம், நவரத்னா எனில் மூன்று ஆண்டு லாபத்தோடு இன்னும் ஏழெட்டு அளவு கோல்களில் சிறப்பான செயல்பாடு, மகாரத்னா என்றால் ரூ 5000 கோடிகளுக்கு மேல் லாபம் என்று பொருள். ஆனால் இந்த ரத்னாக்களும் தனியார்க்கு விற்கப்படும் என்றால் இவர்கள் சொல்லி வந்த நட்ட கதையாடல் என்ன ஆனது? ஆட்சியாளர் சொல்வது போல குழிகளில் பணம் போடப்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்களே தங்கக் குழிகளாக உள்ளன என்பதே உண்மை என்பது இப்பதிலில் தெளிவாகிறது. எதற்காக தனியார் மயம்?” என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.