மதுரை: முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநர், உதவியாளர் பலி
திருமங்கலம் அருகே இன்று அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உயிரிழந்தனர். ஓசூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பூ ஏற்றி சென்ற சரக்கு வேன் ஒன்று, இன்று அதிகாலை திருமங்கலம் அடுத்த கப்பலூர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த ஓசூரை சேர்ந்த வேன் ஓட்டுநர் சேகர்(35) மற்றும் தர்மபுரியை சேர்ந்த உதவியாளர் சாம்ராஜ்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து, திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை 2 மணி அளவில் நடந்த விபத்தால், திருமங்கலம் – மதுரை நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் நடந்த சாலையில் விபத்தில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.